தமிழகத்தில் பட்டியலின மற்றும் ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு முறையாகச் செலவிடாமல் பிற துறைகளுக்குத் திருப்பி விடுவதாகவும், தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மானியக் கோரிக்கையில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதுமின்றி எண்களைக் காட்டி ஏமாற்றும் வேலையே நடப்பதாகவும் புரட்சி தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் ஏர்போர்ட் மூர்த்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


செலவிடப்படாமல் முடங்கும் நூற்றுக்கணக்கான கோடி நிதி
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் ஆண்டின் இறுதியில் முடங்கிப் போவது தொடர்ந்து நீடிக்கிறது என்று வழக்கறிஞர் ஏர்போர்ட் மூர்த்தி சுட்டிக்காட்டினார்.
கடந்த நிதியாண்டுகளின் தரவுகளைச் சான்றாகக் சுட்டிக்காட்டி அவர் பேசுகையில், “2024-25ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ₹957 கோடியில், ₹510 கோடி மட்டுமே செலவிடப்பட்டு, ₹447 கோடி மீதமானது. அதேபோல 2025-26ஆம் ஆண்டிலும் ₹899 கோடி ஒதுக்கீட்டில் ₹379 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு, ₹520 கோடி பணம் செலவிடப்படாமல் முடங்கியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பயன்பாடின்றி எஞ்சும் நிதியை, அடுத்தடுத்த நிதியாண்டுகளின் பட்ஜெட்டோடு சேர்த்து (Carry Over) பட்டியலின மக்களின் நலனுக்காகவே முழுமையாகச் செலவழிப்பதை உறுதிசெய்ய சட்டப்படி வழிவகை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

67 அறிவிப்புகள்… ஆனால் நிதி ஒதுக்கப்பட்டது 4 திட்டங்களுக்கு மட்டுமே!
தற்போதைய தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சரின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் வன்னியரசு சட்டப்பேரவையில் 67 புதிய திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், அதில் வெறும் 4 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 63 திட்டங்களுக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்றும் மூர்த்தி குற்றம் சாட்டினார்.
“உதாரணமாக, அரசு விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்குக் கொசுவலை அமைக்கும் திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான நிதி எவ்வளவு என்பது மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்படவில்லை. நிதி ஒதுக்கப்படாத ஒரு திட்டத்தை அதிகாரிகளால் களத்தில் எவ்வாறு செயல்படுத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், இது வெறும் காகித அளவிலான அறிவிப்பாக மட்டுமே சுருங்கிவிடும் அபாயம் உள்ளது என்றார்.
வெளிநாட்டுப் படிப்பு: பிற மாநிலங்களை விட பின் தங்கிய தமிழக நிலை
பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுப் படிப்புகளை மேற்கொள்வதில் தமிழக அரசு காட்டும் மெத்தனப் போக்கைப் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். “கர்நாடக அரசு பட்டியலின மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி பயில ₹90 லட்சம் வரையிலும், மகாராஷ்டிரா அரசு ₹1 கோடி வரையிலும் நிதியுதவி வழங்குகின்றன. ஆனால் தமிழகத்தில், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் பட்டியலின மாணவர்களுக்குத் தேவையான நியாயமான உதவித் தொகையோ (Scholarship) அல்லது செலவின நிதியோ முறையாகக் கிடைப்பதில்லை. மாணவர்களின் அடிப்படை உணவு மற்றும் ஆய்வகத் தேவைகளைக்கூட அரசு சரியாகக் கண்டுகொள்வதில்லை,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
மாணவர்களுக்கான உணவுக் கட்டண உயர்வு: போதுமானதாக இல்லை!
அரசு விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருந்தாலும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு அது சற்றும் போதாது என அவர் சுட்டிக்காட்டினார். பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கான உணவுப் படி ₹1,400-லிருந்து ₹1,800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ₹1,500-லிருந்து ₹2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு மாணவனின் ஒரு நாள் உணவுக்கு ₹60 முதல் ₹64 மட்டுமே அரசாரல் செலவழிக்கப்படுகிறது.
“காவல்துறை நாய்களுக்கும், சிறைத்துறை கைதிகளுக்கும் ஒரு நாளைக்குச் செலவிடப்படும் உணவுத் தொகையை விடவும் நமது மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகை மிகக் குறைவானது. மாணவர்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் கருத்தில் கொண்டு இந்த உணவுக் கட்டணத்தை இன்னும் கணிசமாக உயர்த்த வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

பதவி உயர்வு இடஒதுக்கீடு: ஆய்வுக் குழுவின் இழுத்தடிப்பு
அரசுப் பணிகளில் பதவி உயர்வு இடஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளில் அரசு காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பதவி உயர்வு இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிற்குத் தொடக்கத்தில் 3 மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், 9 மாதங்கள் கடந்தும் பணிகள் நிறைவடையாத சூழலில், மேலும் 3 மாதங்கள் கால நீடிப்பு (Extension) வழங்கப்பட்டுள்ளது. வெறும் 49 அரசுத் துறைகளை மட்டுமே ஆய்வு செய்ய இவ்வளவு காலதாமதம் செய்வது பட்டியலின சமூகத்தின் மீது அரசு காட்டும் அலட்சியப் போக்கையே தெளிவுபடுத்துகிறது என்று அவர் சாடினார்.
திராவிட மாடல் வரிசையில் தவெகவும் ஏமாற்றக் கூடாது!
தனது பேட்டியின் நிறைவாக, பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு முறையாகச் சென்றடைய வேண்டும் என்பதை மூர்த்தி உறுதியாகக் குறிப்பிட்டார். “கடந்த திமுக அரசு ‘திராவிட மாடல்’ என்ற பெயரில் 100 ஆண்டு கால சமூக நீதியை நிலைநாட்டிவிட்டதாகக் கூறிப் பட்டியலின மக்களை ஏமாற்றியது. அதே வழியில் தவெக அரசும் வெறும் காகித அறிவிப்புகளோடு நின்றுவிடக் கூடாது. பட்டியலின மக்களுக்கான 20% சிறப்பு உட்கூறு திட்ட நிதியை (Special Component Plan) சரியாகக் கணக்கிட்டு, பிற தேவைகளுக்குத் திருப்பி விடாமல் முழுமையாக இச்சமூகத்தின் மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்,” என்று புரட்சி தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் ஏர்போர்ட் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
