ஓடும் ரயிலில் மாற்றுத் திறனாளியை ஆர்பிஎப் போலீசார் எனக் கூறி குடிபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை.
மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு புறப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்ற மாற்றுத்திறனாளிப் பயணி பயணம் செய்துள்ளார்.

ரயில் பெட்டியின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப் என்று கூறி 3 பேர் கதவைத் திறக்குமாறு தட்டியுள்ளதாக கூறப்படுகிறது .
ஆனால் மாற்றுத்திறனாளி பெட்டியில் இருந்த மாற்றுத்திறனாளிகள் கதவைத் திறக்கவில்லை.மேலும் கொரடாச்சேரியில் ரயில் நின்றபோதும் 3 பேர் சேர்ந்து கதவைத் திறக்குமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் மாற்றுத்திறனாளி அல்லாதோர் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி அப்பெட்டியில் இருந்தோர் கதவைத் திறக்கவில்லை.
இந்நிலையில் திருவாரூரில் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்றபோது பயணி ஒருவர் இறங்குவதற்காக கதவைத் திறந்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறிய மூன்று பேர் ஆர்.பி.எப் என்று சொல்கிறோம் , அப்படி இருந்தும் கதவைத் திறக்க மாட்டியா நீ என்று கூறி ஒருகால் இழந்த நிலையில் உள்ள மாற்றுத்திறனாளியான கருணாநிதியை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்தப் பெட்டியில் இருந்து இறங்கி மீண்டும் வேறு பெட்டிக்கே சென்றுவிட்டனர்.
தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே உதவி எண்ணில் மாற்றுத்திறனாளி கருணாநிதி புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் உண்மையிலேயே ஆர்.பி.எப் காவல்துறையினரா அல்லது ஆர்.பி.எப் என்று கூறி தனி நபர்கள் தாக்கியுள்ளனரா என ரயில்வே அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.