
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று (ஜூலை 19) காலை 08.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒருமித்த கருத்தோடு தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 330 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். உலக அளவில் இந்திய நாட்டின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார்.

இரண்டாவது நாளாக அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பேதமின்றி உரிய மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசு ஒரே அரசாங்கம் அது தி.மு.க. அரசுதான். அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்தது பொய்யான வழக்கு என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது. பொய் வழக்கில் இருந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுவிக்கப்பட்டுள்ளேன். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறைப் பிடியில் உள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டனர்.
“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தி.மு.க. தான் கொடநாடு வழக்கின் குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது. தி.மு.க.வைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க. அதன் கொள்கையில் இருந்து எப்போதும் விலகாது; சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.