ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அனைத்து பார்வையாளர்கள் காணொலி வழியாக பங்கேற்றனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படைக் குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் இதற்காக, ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்களில் இன்று இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
பாதுகாப்புப் பணியைப் பொறுத்தவரையில், 5 கம்பெனி படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதைத் தவிர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புப் பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப் படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்தப் புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம், பார்வையாளர்கள் அனுப்பி வைப்பர். ஆதாரத்துடன் எந்தப் புகார்கள் அளித்தாலும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
