புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையினால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மழை பாதிப்பில் இருந்து பல மாவட்டங்கள் முழுமையாக மீளவில்லை. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ள அரையாண்டு தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
தொடர் மழை விடுமுறையால் பாடத்திட்டத்தை முடிப்பதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என்பதால் தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதையேற்று புயலால் பாதிப்புக்குள்ளான விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வை ஒத்தி வைப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளோடு அமைச்சர் அன்பில் மகேஸ் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எஎ பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 9-ம் தேதி முதலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ம் தேதி முதல் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ”மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கான முடிவுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார். மேலும், டிசம்பர் 2-ம் தேதி தொடங்கவிருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகம், சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதர மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு திட்டமிட்டப்படி வழக்கம்போல் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்