“மதுரை AIIMS” மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்விக்கு, காம்பவுண்ட் சுவர் கட்டி முடிக்கும் பணி 95% நிறைவு பெற்றுள்ளதாக – மத்திய அரசு விளக்கம்.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ, மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கான காரணங்கள் என்ன என்றும்? நிலம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் தாமதம் அடைவதற்கான காரணங்கள் குறித்தும் முழுமையான வளாகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்றும் வைகோ எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.


அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2020ம் ஆண்டு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி 95% தொடக்கப்பணிகள் குறிப்பாக காம்பவுண்ட் சுவர் உள்ளிட்டவை கட்டும் பணிகள் முடிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கான கூடுதல் திட்ட பணிகள் சேர்க்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டதாகவும், இருப்பினும் வளாகம் கட்டமைக்க மாஸ்டர் பிளான், திட்டமிடல் பணிகள், உபகரணங்கள் தேவை உள்ளிட்டவை குறித்து முழுமையான அறிக்கையை தயார் செய்யப்பட்டதற்கு பிறகு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கி அதன்படி 2021 மார்ச் 26ம் தேதி இந்தியா ஜப்பான் இடையே கையெழுத்து ஒப்பந்தம் நடைபெற்றதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்ட மதிப்பு முதலில் 1,264 கோடி என மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் மாற்றியமைக்க பட்ட மதிப்பீடாக 1,977.8 கோடி ரூபாய் எனவும், கடன் ஒப்பந்தத்தின் படி 5 வருடம் 8 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டக்கூடிய பணிகள் முடிவடைய வேண்டும். அதன்படி 2026 அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் 50 மாணவர்கள் பயில்வதற்கான கல்வி தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதன் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.