பொது கலந்தாய்வால் தமிழக மருத்துவ மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி- மா.சு.
மருத்துவ சேர்க்கைக்கான பொது கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் 187 வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நாட்டில் உள்ள 100% மருத்துவ படிப்புகளுக்காக இடங்களுக்கு ஒன்றிய அரசே மாணவர் சேர்க்கை நடத்தும் என்ற அறிவிப்பு ஏற்கக் கூடியது அல்ல. இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும் மருத்துவ சேர்க்கைக்கான பொது கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும். அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழ்நாடு மாணவர்களின் முன்னுரிமை பறிப்போகும். பொது கலந்தாய்வை எதிர்த்து முதலமைச்சர் கடிதம் எழுதியும் அதை பொருட்படுத்தாமல் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால், வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவ கல்லூரிகளில் இடங்களை பிடிக்கும் நிலை ஏற்படும். அதிகளவு மருத்துவ கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில் தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர்கள் பயன்பெறுவர். இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. நீட் தேர்வில் எப்படியாவது விலக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பாரா? இல்லையா? என்பது ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட தேதியில் கண்டிப்பாக திறப்பு விழா நடக்கும்” என்றார்.