Homeசெய்திகள்தமிழ்நாடு"செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை"- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

“செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

-

 

சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை!

இந்த நிலையில், இன்று அதிகாலை சோதனை அனைத்தும் முடிவடைந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக இன்று (ஜூன் 14) காலை 06.00 மணியளவில் காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை. தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி கண் திறந்து பதில் சொன்ன பிறகு தான் என்ன நடந்தது என தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை. மருத்துவர்கள் அறிக்கையைப் பார்த்த பிறகு தான் உடல்நிலைக் குறித்து தெரிய வரும். செந்தில் பாலாஜியைப் பார்க்க அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை” என்றார்.

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதை அடுத்து கரூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 500- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கரூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ