தமிழ்நாட்டில் , முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகள் உள்ளன. இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐக்கு மாற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கருப்பையா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டதோடு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்ற கருப்பையா காந்தி எப்படி கூற முடியும் என்று மனுதாரருக்கு கேள்வியெழுப்பியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் விளக்க மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கருப்பையா காந்தி தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டும், மேலும் இதே வழக்கில் கூடுதலாக மனு தாக்கல் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கில் போதிய அவகாசம் கொடுக்கப்பட்டும் அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்பது தற்போது உங்களது நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் வழக்கு தொடர்பாக நீங்கள் வைத்துள்ள குற்றச்சாட்டிலும் முகாந்திரம் இல்லை. இது ஒரு முழுமையடையாத மனு என்பது நிரூபணம் ஆகியுள்ளது இருப்பினும் நீங்கள் தாக்கல் செய்துள்ள பிரதான மனுவை அடிப்படையாக கொண்டு மட்டுமே விசாரணை நடத்தப்படும்.
புதியதாக எந்தவித மனுக்களையும் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.