கலைஞர் நூற்றாண்டு விழாவை நாடே திரும்பி பார்க்கும்- மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறதே. அதை எப்படிக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? என உங்களில் ஒருவன் தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதில், “’மறந்தால் அல்லவா நினைப்பதற்கு!’- என்று சொல்வார்கள். நமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத் தலைவர் கலைஞரை மக்கள் நாள்தோறும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்! வருகின்ற சூன் 3 அன்று அவருடைய நூற்றாண்டு தொடங்கப்போகிறது. இந்த விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி கொண்டாட இருக்கிறோம். ஓராண்டு காலம் முழுவதும் தலைவர் கலைஞரின் சாதனைகளை நினைவுபடுத்தி, நன்றி செலுத்தும் ஆண்டாக இருக்கப்போகிறது.

ஜூன் 5-ஆம் நாள், இந்த நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதற்காக மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை டெல்லி சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில், தலைவர் கலைஞர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் வைத்துள்ள மதிப்பையும் மரியாதையும் நான் அறிந்தேன். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் அவர். இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் அவர். விளிம்பு நிலை மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் அரசியல் ஆளுமைகளாக வரவேண்டும் என நினைத்த தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் தொடங்கி வைப்பது மிகமிகச் சிறப்பானது. சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.
மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அதன்பிறகும் மக்களுக்கு பயனளிக்கும் தலைவராக கலைஞர் விளங்கி வருகிறார் என்பதை சொல்லத்தக்க வகையில் பயனுள்ள விழாக்களாக இவை அனைத்தும் அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.