அதிமுக ஆட்சியில் ஊழல்- விசாரணை மேற்கொள்ளப்படும்: மு.க.ஸ்டாலின்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதலமைச்சரின் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை டெண்டர்கள் வழங்கியதில் தொடங்கி, காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் என பல்வேறு திட்டங்களிலும் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் நிலை என்ன? என உங்களில் ஒருவன் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அ.தி.மு.க.வின் கரெப்ஷன் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அதை சிஏஜி அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது. ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் அடிப்படையில், இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல சில முன் அனுமதிகளையும், இசைவு ஆணைகளையும் பெற வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை நிறைவடைந்து – கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகள் அனைத்தும் நிச்சயம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றதும் எடப்பாடி பழனிசாமியின் வீரியம் அடங்கிவிட்டதைப் பார்த்து என்ன தோன்றியது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு வீராவேசமாக டெல்லிக்குக் கிளம்பிச் சென்று காத்திருந்து, காற்று போன பலூனாக திரும்பி வருவது அவருக்கோ, அவர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் புதிதில்லையே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.