நான் உயிரோடு இருக்க காரணமே இவர்தான்- மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்தார்.

அதன்படி,வில்லிவாக்கத்தில் ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஐ.சி.எப். மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு மேம்பாலம் என்று பெயர் சூட்டி முதலைமச்சர் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் இந்த மேம்பாலம் கட்டுவதற்காக அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்ட 51 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆட்சி யாருடையதாக இருந்தாலும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தான் திமுக. 2014 இந்த பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நான் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் இல்லை. எதிர் கட்சியாக இருக்கும் போது பேசலாம் வாங்க என்று தலைப்பில் தொகுதி முழுவதும் கூட்டம் நடத்தினோம். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கொடுத்து முடிந்த அளவு நிறைவேற்றப்பட்டது.
நீண்ட கோரிக்கைக்கு பிறகு 2017 ஆண்டு பாலம் கட்ட அனுமதி கிடைத்தது. 2019 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. நான் முதல்வராக வந்தபின் பணிகளை வேகப்படுத்தினேன். 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது திறக்கப்பட்டது. மூன்று முறை கொளத்தூர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். இரண்டு முறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்தேன். இப்போது முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். முதல்வராக பல மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட பணிகளை மேற்கொண்டாலும் கொளத்தூர் தொகுதியில் உள்ளே வரும் போது பணிகளை முடித்து விட்டு என் வீட்டுக்கு வருவது போல் உணர்கிறேன்.
கொளத்தூர் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளேன். அதன் படி மேயர் சிட்டிபாபு மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என்னிடம் அமைச்சர்கள் கேட்டபோது, மேயர் சிட்டிபாபு பெயர் வைக்க கூறினேன். சென்னையில் 9 மேம்பாலங்களை கட்டாமல் இருந்திருந்தால் இன்று போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்று மக்கள் யோசித்து பார்க்க வேண்டும். இன்று நான் உயிரோடு நின்று பேசுவதற்கு முழு காரணம் சிட்டிபாபு தான். அதனால் அவர் பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.