நெல், கரும்புக்கு வாக்குறுதி அளித்தபடி உரிய விலை வழங்கப்படும்- அமைச்சர் உறுதி
நெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் என சொன்ன வாக்குறுதியை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நிதி நிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்கப்படுமென்று கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கரும்பு விவசாயிகளுக்கு அவர்களின் தொகையை பாக்கி இல்லாமல் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன் 2.25 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு கரும்பு விவசாயம் செய்த அளவில் கடந்த 10 ஆண்டுகளில் 105 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு தான் கரும்பு பயிர் செய்யும் அளவு உருவானதால் கரும்பு ஆலைகள் நலிவுற்றது. கரும்புத்துறை, சர்க்கரைத் துறை நிர்வாக சீர்கேடாக இருந்தது.
தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு கரும்பு பயிரிடக் கூடிய சூழல் கடந்த இரண்டு ஆண்டுகளில் உண்டாகியிருக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி இல்லாமல் நிலுவைத்தொகை இல்லாமல் இதுவரை வழங்கி வரும் வருகிறோம். மூடப்பட்ட நிலையில் இருந்த 5 ஆலைகள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. கூடுதலாக எத்தனால் பிளான்ட் நிறுவப்பட்டது, கொள்கை மாற்றப்பட்டுள்ளது. வருகின்ற 3 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகள் நல்ல லாபம் பெரும் வகையில் மகசூல் அளிக்கக்கூடிய சூழலில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது 195 ரூபாய் உயர்த்தி நிதிநிலை அறிக்கை அறிவித்துள்ளார். சந்தேகப்பட வேண்டாம், நெல்லுக்கும் கரும்புக்கும் சொன்ன வாக்குறுதியின்படி தொகௌ கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு இருந்த காரணத்தினால்தான், 55 ஆயிரம் ஏக்கரில் கரும்பை கூடுதலாக பயிர் செய்யக் கூடிய நிலை இருப்பதாக தெரிவித்தார்.