பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த நவம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாகவே, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பிலும், பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும், பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கடிதம் மூலம் வலியுறுத்தினர்.


இதையடுத்து, தற்போது மத்திய அரசு வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையில் சம்பா பருவம் ஆகும். இந்தாண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் சரியாக பயிர் சாகுபடி நடைபெறவில்லை. அக்டோபர் மாதத்தில் குறைந்த அளவே பயிர்க் காப்பீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதியுடன் காப்பீட்டு காலவரையறை முடிந்தது. முன்னதாக, வேளாண் துறை செயலர் மத்திய அரசுக்கு பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து விவரங்களுடன் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய வேளாண் துறை பிரதமரின் பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிதது உத்தரவிட்டுள்ளது.


