மணப்பாறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி ( 65). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 16ம் தேதி அந்த பணத்திற்கான வட்டியை வாங்குவதற்காக சரஸ்வதியின் வீட்டிற்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் இதுதொடர்பாக மூதாட்டியின் மகள் மலர்விழி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸார், மூதாட்டி கமலவேணி கடைசியாக சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றதால் அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணம் வாங்க வந்த மூதாட்டி கமலவேணியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தாக்கியதில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் சரஸ்வதி வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் அவரது உடலை சரஸ்வதி மகள் வர்ஷினி (23) மற்றும் மகன் ஹர்சன் (19) இருவரும் சேர்ந்து அன்று நள்ளிரவே இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வாகைக்குளம் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும், பின்னர் அனைவரும் வழக்கமாக வேலையை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.
வாக்குமூலத்தின் அடிப்படையில் கிணற்றில் வீசப்பட்ட கமலவேணியின் உடலை மீட்ட போலீஸார், அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சரஸ்வதி, அவரது மகள் மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் ஹர்சன் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு பயின்று வருவதும், அவர் ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதும் , மகள் வர்ஷினி சென்னையில் உள்ள ஒரு ஐஏஎஸ் அகாடமியில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.