உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய அவசர சிகிச்சை மையம் திறப்பது எப்போது? என்ற கேள்வியை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.
உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த தாலுகா மருத்துவமனை, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், ஆனைமலையான்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் தலைமை மருத்துவ மனை என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக இந்த மருத்துவமனையில் 8 நிரந்தர மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். எனினும் தற்போது 2 நிரந்தர மருத்துவர்களும், டெபுடேசன் அடிப்படையில் அனுப்பப்பட்ட 2 தற்காலிக மருத்துவர்களும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் காலையிலேயே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சமீபத்திய பனிக்காலத்தால் காய்ச்சல், சளி, புதிய வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ளன. அதனுடன் நெஞ்சுவலி, சர்க்கரை, ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளும் அதிகரித்து வருகின்றனர். உள் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
மருத்துவர்களின் பற்றாக்குறையால் கடந்த 3 மாதங்களில் இரவு நேர அவசர சிகிச்சை தேடி வரும் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் இல்லாத உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை தான் ஆயிரக்கணக்கான மக்கள் சார்ந்துள்ளனர்.
மேலும், சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட ‘விபத்து அவசர சிகிச்சை மையம் – தாய் வார்டு’ இதுவரை திறக்கப்படாததும் மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. அங்கு ஸ்கேன், எக்ஸ்ரே, 24 மணி நேர லேப் போன்ற நவீன வசதிகள் இருக்க வேண்டிய நிலையில், அது முழுமையாக செயல்படாமல் மூடியே கிடக்கிறது.
உடனடியாக நிறைவேற்றும் படி பொதுமக்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள்,
- குறைந்தது 5 மருத்துவர்களை உடனடியாக டெபுடேசன் அடிப்படையில் நியமிக்க வேண்டும்.
- நிரந்தர மருத்துவர்களின் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.
- புதிய விபத்து – அவசர சிகிச்சை மையத்தை ஸ்கேன், நவீன எக்ஸ்ரே, 24 மணி நேர லேப் வசதிகளுடன் திறக்க வேண்டும்.
- பிரசவம் மற்றும் அவசர சிகிச்சை சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
அமெரிக்கா விசா ரத்தான விரக்தியில் பெண் மருத்துவர் தற்கொலை!! உருக்கமான கடிதம் சிக்கியது…


