சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மனுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து
சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, “சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு ( @Tharman_s ) மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உத்திசார் கூட்டு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. தர்மன். சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள் ! உங்களது தமிழ் மரபும். அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு. சிங்கப்பூரின் பன்முகத்தன்மையையும் வெளிக்காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.