Homeசெய்திகள்தமிழ்நாடுரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

-

ரயில்வே பெண் போலீஸ் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Female policeman commits suicide by jumping in front of train with 2 children

மதுரை அய்யர்பங்களாவில் வசித்து வருபவர் சுப்புராஜ், இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் குடும்பத்துடன் மதுரை அய்யர் பங்களாவில் குடியிருந்து வருகிறார்கள். சுப்புராஜ் பெயிண்டராக பணிபுரிந்து வரும் நிலையில், ஜெயலெட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சிக்கு மாறுதல் ஆனதால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை தனது இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர் அருகே சென்ற ஜெயலட்சுமி வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சமயநல்லூர் கிராமத்திற்கும், தேனூர் கிராமத்துக்கும் இடையில் உள்ள தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வழியாக திருச்சி நோக்கி சென்ற ரயில் முன் தனது 11 வயது மகன் காளிமுத்து ராஜா, 9 வயது மகள் பவித்ரா ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த மதுரை ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த மூவரின் உடலையும் சேகரித்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ