சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 3 பேர் தமிழக- கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் உள்ள மீன் பிடிப்பதற்காக சென்றனர்.


கடந்த 14-ஆம் தேதி இரவு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கர்நாடக வனத் துறையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ராஜா என்ற மீனவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தார். மற்ற மீனவர்கள் அங்கிருந்து தப்பி கிராமங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், குண்டடிபட்ட மீனவர் ராஜாவின் உடல் உயிரற்ற நிலையில் நீரில் மிதந்த நிலையில் பாலாறு கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்யும் வரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர் ராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ராஜாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
