ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர் நிழல் குடை அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று விமர்சனம் கூறக்கூடிய எதிர்க்கட்சியினர் செய்தித்தாள்களையும், ஊடகங்களையும் தினசரி படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருக்கிறார். கரூர் திருமாநிலையூர் பகுதியில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையம் பத்து மாதங்களுக்குள் பணிகள் முடிந்து கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு புறநகர் பேருந்து நிலையமாகவும், பயன்பாட்டில் உள்ள கரூர் பேருந்து நிலையம் நகர பேருந்துகள் இயங்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளன.
கரூரில் இன்று மட்டும் 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றுள்ளது” என தெரிவித்தார்.
