கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்
தமிழகத்தில் சென்னையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானது கிண்டி சிறுவர் பூங்காவாகும். இது சுமார் இருபத்திரெண்டு ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்தப் பூங்காவில் குரங்கு, முதலை, நரி, ஈமு கோழி, தீக்கோழி, ஆமை, மான், பாம்பு என ஐந்நூறுக்கும் மேற்பட்ட வன விலங்குகள், மயில், கொக்கு, நாரை, கிளிகள் என முந்நூறுக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.


தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், விடுமுறை நாட்களில் ஐந்தாயிரம் பார்வையாளர்களும் வருகின்றனர்.
கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் பொதுமக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். சென்னையில் தற்போது வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பறவைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பூங்காவில் உள்ள வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வெயிலினால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உடல் அலர்ஜி ஏற்படாத வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தினமும் காலை அனைத்து பறவைகளின் மீதும், கூடுகளின் மீதும் விலங்கினங்கள் மீதும் தண்ணீரை அடித்து உடலை குளிரச் செய்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல் வெயில் காலத்துக்கு ஏற்ற தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் தீ பரவாமல் இருக்க காய்ந்த மரங்களின் செடிகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றனர். சில விலங்குகள் கோடை வெப்பத்தை தாங்கும் வகையில் சிறப்பு கூண்டுகளில் அடைக்கப்பட்டு வந்துள்ளது.
வண்டலூர் விலங்கியல் பூங்காவிலும் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ஷவர் மூலம் யானைகளுக்கு குளியலும், மலைப்பாம்புகளின் மீது தண்ணீரை அடித்தும், விலங்கினங்களின் கூண்டுகளின் மீது தண்ணீரை தெளிப்பதுடன் நீர்சத்து உள்ள பழங்கள் உணவாக விலங்கினங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. .