கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் போராட்டம். மத்திய அரசு வழங்கி வரும் சிலிண்டர் மானியம் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை என புகார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 900க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நியாய விலை கடையில் அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்கள், மாதாந்திர உதவித்தொகை என இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிலிண்டர் மானியம் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அனைவருக்கும் சிலிண்டர் மானியம் வழங்கிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பெரும்பாலானோருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். அதிகாரிகளிடம் முறையிட்டால் வங்கி கணக்கில் ஒரு இலக்க எண் மாற்றி வேறு கணக்குகளுக்கு சென்று விட்டதாக மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். உடனடியாக அனைவருக்கும் முறையாக சிலிண்டர் மானியம் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இந்தியாவில் குடியிருந்து வருவதாகவும் இந்திய குடியுரிமை வழங்காததால் பல பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், தங்களுக்கு குடியுரிமை வழங்கிட வேண்டும் என கேட்டு கொண்டனர்.
தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20,000 இழந்த இளைஞர் தற்கொலை