- Advertisement -

தமிழ்நாடு அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-ல் கடைசித் தர நிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022- ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! ‘TANSEED’ புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் தொழில் நிதியம், ‘LaunchPad’ நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 7,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
அவற்றுள் 2022- ஆம் ஆண்டில் மட்டும் 2.250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்க வைக்கவும், மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.