அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி, வைத்திலிங்கம், ஜெ.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
பின்னர், அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனிப்பு வழங்கிப் பாராட்டினார்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சியை நிறுவி, பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் களப் பணியாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
துரோகக் கூட்டத்தை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்”. இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.