மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மீன்வள பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் ரவீந்திரன் நாடார். இவரது இளைய மகள் நிஷாந்தினி(வயது18). இவர் பொன்னேரியில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். தொடர் மழையால் கல்லூரி விடுமுறை விடப்பட்ட தினத்தில் தனது வீட்டிற்கு வந்திருந்தார். அவரது வீட்டில் அவருடைய அக்கா மகாசுபாஷினி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவர் குணமடைந்தார்.

இந்நிலையில் அக்கா மூலம் தங்கை நிஷாந்தினிக்கும் டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. நிஷாந்தினிக்கு காய்ச்சல் அதிகமாகி உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று நிஷாந்தினி பரிதாபமாக இறந்தார். அவர்களுடைய அக்காவிற்கு எப்படி டெங்கு வந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
