காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை
செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு தனது மனைவி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வினோத் என்பவர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தற்காலிக மின் ஊழியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அம்மு என்கிற மனைவி மற்றும் ஏழு வயது உள்ள மகன், ஐந்து வயதில் மகள் என குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் வினோத்தின் வீட்டின் அருகிலேயே அதே பகுதியைச் சேர்ந்த தாந்தோனி என்பவர் வினோத்தின் மனைவி அம்முவிற்க்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தனது கணவர் வினோத்திடம் அம்மு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் அவரது மனைவி அம்மு இருவரும் சேர்ந்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது வழக்கு பதிவு செய்து தாந்தோணி என்பவரை கைது செய்யாமல் இருப்பதை நேற்று மாலை வினோத் தனது மனைவியுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேட்டுள்ளார்.
அங்கு இருந்த மகளிர் காவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்து விரக்தி அடைந்த அம்முவின் கணவர் வினோத் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேன் எடுத்து அவர் மீது ஊற்றிக் கொண்டு தீயை வைத்துக் கொண்டார்.
இதை கண்ட மகளிர் காவல் நிலையத்தினர் அலறி அடித்து தீயை அணைக்க முற்பட்டு அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 65 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு அனுப்பி உள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வினோத் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.