ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு, கலாச்சார நிகழ்வா என்பதை மாநில அரசே தீர்மானிக்கும் எனக் கூறிய நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை என அதிரடியாக தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தில் எந்த தவறும் இல்லை என்ற நீதிபதிகள், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக ஜல்லிக்கட்டை எடுத்துக் கொள்ள வேண்டாமா என்பதற்கு சட்டத்தால் பதில் கூற முடியாது என்றனர். தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி 100 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நடந்துவரும் ஜல்லிக்காட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் திருப்தியாக உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று அரசு சட்டம் இயற்றியுள்ள நிலையில், நீதித்துறை அதில் தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளனர். அவசர சட்டத்துக்கு தடைகோரிய பீட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.