சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை நடத்துகிறது. எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொழீல்துறை சார்பில் நடைபெறும் இந்த தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டின்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடியில் அமையவுள்ள செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா இன்று நடைபெறும் நிலையில், அவற்றோடு 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு முதலீட்டு மாநாடு குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 2021 – 23 ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம் 19 நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதனால் ரூ.17 ஆயிரத்து 616 கோடி முதலீடு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.68 ஆயிரம் கோடிக்கான திட்ட பணிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் 1.06 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.