தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், தாயகம் கவி, ஆர்.டி. சேகர், திருப்பூர் நல்லதம்பி, காரப்பாக்கம் கணபதி, அரவிந்த் ரமேஷ், பரந்தாமன், பிரபாகர ராஜா, சென்னை வடக்கு மாவட்ட காவல்துறை இணை ஆணையர் மனோகர், உட்பட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக் குழுத் தலைவர் வேல்முருகன், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் 2006-ஆம் ஆண்டு இந்த பொறுப்பை தனக்கு வழங்கியதாகவும் இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்த பொறுப்பை மூன்றாவது முறையாக தனக்கு மீண்டும் வழங்கியுள்ளதாகவும் கூறினார். சட்டப்பேரவையில் வழங்கக்கூடிய உறுதிமொழிகள் தொடர்பாக சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முதல் மாநில அதிகாரிகள் வரை என, அனைத்து அறிவிப்புகள் தொடர்பான அனைத்து பணிகளையும் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சார்பாகவும் முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், உறுதிமொழிகள் என அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.
பல மாவட்ட ஆட்சியாளர்கள் இந்த ஆய்வு கூட்டம் தொடர்பாக பின்வாங்கிய நிலையில் பெண் மாவட்ட ஆட்சியராக சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வு கூட்டத்தினை முன்னெடுத்து, முன்னிலையில் நடத்தி வருகிறார் என அவர் பாராட்டுத் தெரிவித்தார். ஆளுங்கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், எதிர்க்கட்சி நிர்வாகிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆய்வினை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அறிவிப்பினை உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும் குறிப்பாக அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியத்தினை நிறுத்தம் செய்யவும் இந்த குழு பரிந்துரை செய்யும் என்றும் வேல்முருகன் கூறினார்.
சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் திட்டங்களால் மக்கள் பயனடைகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்க்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்ச நீதிமன்றம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய வேல்முருகன், ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை இந்தியாவிலேயே பெற்ற ஒரு மாநிலம் தமிழ்நாடு தான் என்றார்.
மிரட்டிய மோகன்லால்….அப்போ ‘த்ரிஷ்யம்’ இப்போ ‘துடரும்’ …. ட்விட்டர் விமர்சனம்!