பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாளையொட்டி நாளை பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்துகிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் 30ம் தேதி காலை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில், முதலமைச்சர், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கும், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..