சென்னை காரப்பாக்கத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை கட்டாயபடுத்தி கையெழுத்து போட வைத்த விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை காரப்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகில் பாஜக மாநில ஆன்மிகப் பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நேற்று மாலை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு தலைவர் சக்கரவர்த்தி, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி காரப்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி விடும் நேரத்தில் துவங்கப்பட்டது. அப்பொழுது பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திட பாஜகவினர் அழைத்தனர். ஆனால் பள்ளி மாணவர்கள் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் வீட்டிற்கு செல்ல முற்பட்டனர்.
பிறகு பள்ளி மாணவர்களை கையெழுத்து பலகையில் கையெழுத்திட பிஸ்கட்டுகள் வழங்குவதாக கூறி அழைத்துச் சென்றனர். ஒரு சில மாணவர் – மாணவிகள் கையெழுத்து பலகையில் கையெழுத்திட்டனர். ஆனால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பிஸ்கட்டையும் பொருட்படுத்தாமல் அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாஜகவினர், அவர்களை கையை பிடித்து இழுத்து அவர்களை தடுத்து, கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தினர். பல மாணவ -மாணவிகள் எதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கையை உதறிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் பாஜகவினர் வலுக்கட்டாயமாக அவர்களை தடுத்து நிறுத்திய தூக்கிச் சென்றும், கையெழுத்திட வற்புறுத்தினர். இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.பள்ளி மாணவர்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதும், அவர்களுக்கு பிஸ்கட்டுகள் தருவதும் போன்ற வீடியோ காட்சிகள் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெகுவாக பரவியது.

இது குறித்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சென்னை தெற்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாஜக மாநில ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் சுந்தரம் என்கிற லியோ சுந்தரம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா மற்றும் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் (45), முன்னாள் சோழிங்கநல்லூர் மண்டல தலைவர் மோகன் குமார்(45), முன்னாள் அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் அன்பரசன்(44) ஆகிய 5 பேர் மீது 126(2), 192, BNS Act & 3 JJ Act என 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, 5 பேரையும் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவர்கள் 5 பேரையும் மாஜிஸ்திரேட் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.