விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே மிகவும் சக்தி வாய்ந்த அங்காளம்மன் கோவில் மேல்மலையனூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி, மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் ஆலயத்தில் நேற்று(1.8.2023) ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெண்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் அங்காளம்மன் முன் விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிளக்கு பூஜையின் முடிவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் அங்காளம்மனை வழிபட்டு அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.