திருச்செந்தூர்: தூண்டில் பாலம் அமைக்கக்கோரி மீனவர்கள் விடிய விடிய போராட்டம்
திருச்செந்தூர் அமலி நகர் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி 10-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிராத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர் அமலிநகர் பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 7-ஆம் தேதி முதல் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 10-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. இன்றும் 200 பைபர் படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தற்பொழுது உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திக்கோரி அமலிநகர் மீனவ கிராம பகுதியில் சுமார் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் அமைதியான முறையில் விடிய விடிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமலி நகர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார் ஆனாலும் அமலிநகர் மீனவர் மக்கள் இப்போரட்டத்தினை கைவிடாமல் தொடர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.