இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது கட்டமாக செப்டம்பர் மாதத்திலும் சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240-ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260-ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 325- ரூபாயில் இருந்து 375-ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395- ரூபாயில் இருந்து 455-ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 10-ரூபாய் முதல் 60-ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.