மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோடை விடுமுறையையெட்டி சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக சென்ற நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அடித்து செல்ல பட்ட சிறுவன் 5 கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
அதனால் சுற்றுலா பயணிகள் அளரி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில் போலீசார் தற்போது குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.