அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களின் போனஸ் குறித்து உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டதாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு, அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிகசிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கின்ற நிலையிலும், முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741, C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு, அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்தும், அறியாததுபோல மருத்துவர் ச.ராமதாஸ் அவர்கள் X-
தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை
சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை
வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும்,
வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை
வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.