சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவு பெறவுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய வெற்றி வேட்பாளர் அண்ணன் டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து சேலம் நரசோதிப்பட்டியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம். இந்திய ஒன்றியத்தின் வலிமையை பெருக்க – தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.