விரைவில் 3-ஆம் பாலினத்தவர்களுக்காக தனி சுய உதவிக் குழுக்கள்- உதயநிதி ஸ்டாலின்
திருச்சி அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த பள்ளிக் கட்டடம், NCC அலுவலகம், கழிவறை உள்ளிட்ட இடங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின் மாணவர்களிடையே உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் வேறு எதிலும் தங்களுடைய கவனத்தை சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவே பெருமைப்படக்கூடிய அளவிற்கு நீங்கள் முன்னேற வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து திருச்சியில் உற்பத்தியாளர், சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “திராவிடமாடல் அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, மகளிர் சுயஉதவிக் குழுவை பொறுத்தவரை நாங்கள் உங்களுக்கு வழங்குவது கடன் அல்ல. உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. கண்டிப்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைக்க வழிவகை செய்வோம். பூங்கொத்து மற்றும் சால்வைக்கு பதிலாக, புத்தகங்கள் (அ) மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசாக கொடுங்கள். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் பக்கபலமாக இருக்கும்” என்றார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “திருச்சி அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த பள்ளிக் கட்டடம், NCC அலுவலகம், கழிவறை உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு செய்தோம். மாணவர்கள் மத்தியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர்களுடன் கலந்துரையாடினோம். நம் திராவிட மாடல் அரசு மாணவர்களின் வளர்ச்சிக்கும் என்றும் துணை நிற்கும்.
மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரித்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம்.
அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட போது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இருக்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது. பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.