தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? பரபரப்பு ஆலோசனை
தமிழகத்தின் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக நாளை டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு , உள்துறைச் செயலாளர் அமுதா மற்றும் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் தமிழக கேடரில் டிஜிபிக்களாக உள்ள மூத்த அதிகாரிகள், துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகமால் இருக்கும் மூன்று அதிகாரிகளை தமிழக அரசு தரப்பில் பரிந்துரைத்து, தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு விதிகளின் படி அவர்களில் ஒருவர் தமிழக அரசு டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழக காவல் துறையில் தற்போது 10 டிஜிபிக்கள் உள்ளனர். தமிழக கேடர் அதிகாரியான சஞ்சய் அரோரா தற்போது அயல்பணியில் டெல்லி காவல் ஆணையராக உள்ளார். அதற்கடுத்து சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால், டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, ஆபாஷ் குமார் ஆகியோர் மூத்த அதிகாரிகளாக உள்ளனர்.
அதேபோல் கடந்த மாதம் பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறை பயிற்சி அகாடமி இயக்குனராக உள்ள டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், மத்திய அயல்பணியில் உள்ள ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அபய்குமார் சிங், டிஜிபி வன்னிப் பெருமாள் ஆகியோரும் டிஜிபி பட்டியலில் உள்ளனர். இவர்களில் மூன்று மூத்த ஐபிஎஸ்களை பட்டியலிட்டு நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பின்னர் ஒருவரை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜியாக தேர்ந்தெடுப்பார்கள்.