
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் நேற்று (ஜூன் 18) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

கனமழை- சென்னை வரும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!
பலத்த காற்று வீசியதால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதனை அப்புறப்படுத்தும் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் சூழ்ந்துள்ளதால், கத்திப்பாரா மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) ஒருநாள் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திடீர் மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருகிறது. தமிழகம் அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை தொடர்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளது.
சென்னையில் 10 மணி வரை மழை தொடரும்!
தென்சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட மூன்று மடங்கு அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் இரண்டு (அல்லது) மூன்று நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக ஜூன் மாதம், கடந்த 1996- ஆம் ஆண்டு கடைசியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்றிரவு முதல் பெய்து வரும் மழையால் நடப்பாண்டில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.