மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா காலமானதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதர் திரு. சங்கரய்யா அவர்கள் மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு. சங்கரய்யா அவர்கள் எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்ததோடு, கதர் ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் திரு. சங்கரய்யா அவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பதவியை வகித்த பெருமையும் அவருக்கு உண்டு. திரு. சங்கரய்யா அவர்களுடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும் பழகக்கூடியவர். எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் திரு. சங்கரய்யா என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. இவருடைய இழப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு ஆகும்.
பெரியவர் திரு. சங்கரய்யா அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.