ஈரான் – இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் ஒரு வாரத்தை கடந்துள்ளது. இரு நாடுகளும் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் ஈரான் ஃபட்டா 01, செஜில் போன்ற ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலில் உள்ள இலக்குகளை தாக்கியது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக போரில் இறங்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது குறித்து 2 வார காலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானுடைய 3 அணு உலைகளை தாக்கி, நாங்கள் போரில் இறங்கிவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரானில் உள்ள 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். ஈரானின் ஃபோர்டோ, நாதன்ஸ், எஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அறிவித்தார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் பி-2 பாம்பர் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஈரான் மீதான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் குறிப்பிட்டார். தாக்குதலை நடத்திவிட்டு அனைத்து போர் விமானங்களும் அமெரிக்காவுக்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும், அல்லது பெரிய தாக்குதலை ஈரான் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். அணு ஆயுத அச்சுறுத்தலை தடுக்கவே ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடைபெற்றதாகவும் அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்தார். உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு தரும் நாடு ஈரான்தான் என குறிப்பிட்ட டிரம்ப், ஈரானின் சில இலக்குகளை அமெரிக்கா விட்டு வைத்துள்ளதாகவும், ஈரான் அமைதிப்பாதைக்கு திரும்பாவிட்டால் எஞ்சியுள்ள இலக்குகளையும் தகர்ப்போம் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.