Homeதிருக்குறள்17 - அழுக்காறாமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

17 – அழுக்காறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

17 - அழுக்காறாமை, கலைஞர் குறல் விளக்கம் ,திருக்குறள்,

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
         தழுக்கா றிலாத இயல்பு.

கலைஞர் குறல் விளக்கம்  – மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

162. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
         அழுக்காற்றின் அன்மை பெறின்.

கலைஞர் குறல் விளக்கம்   – யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

163. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
        பேணா தழுக்கறுப் பான்.

கலைஞர் குறல் விளக்கம்  – அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான். பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
         ஏதம் படுபாக் கறிந்து.

கலைஞர் குறல் விளக்கம்  – தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

165. அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
        வழுக்கியுங் கேடீன் பது.

கலைஞர் குறல் விளக்கம்  – பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

166. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
         உண்பதூஉ மின்றிக் கெடும்.

கலைஞர் குறல் விளக்கம்  – உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும் கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
        தவ்வையைக் காட்டி விடும்.

கலைஞர் குறல் விளக்கம்  – செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
        தீயுழி உய்த்து விடும்.

கலைஞர் குறல் விளக்கம்  – பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.

169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
        கேடும் நினைக்கப் படும்.

கலைஞர் குறல் விளக்கம்  – பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

170. அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
         பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

கலைஞர் குறல் விளக்கம்  – பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை, பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

MUST READ