மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ ஆதரவை தெரிவித்து உள்ளது. எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி எங்களது செயல்பாடு இருக்கும் மற்றும் தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.
தமிழகத்தில் வேலை பார்க்கும் வெளி மாநில ஊழியர்கள் அவரவர் மாநிலங்களில் பணியமர்த்தப்பட வேண்டும். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு தமிழகத்திலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும்.
Railway Recruitment Board-க்கு மாறாக Railway Service Commission அமல்படுத்தப்பட்டு அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் பணி கிடைக்கப்பெற வேண்டும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள எஸ்ஆர்எம்யூ அலுவலகத்தில் ரயில்வே மற்றும் மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் நிலைக்குழு உறுப்பினர் மற்றும் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவருமான கண்ணையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்;
கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர், தமிழக நிதி அமைச்சகத்தின் செயலராக இருந்த சோமநாத், ஜேசிபி குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அந்த வகையில் மத்திய அரசின் பணிகளில் பணிபுரியும் ஊழியர்களின் கடைசி வருட சம்பளத்தில் 50% தொகையை கணக்கிட்டு அதனை ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள். கூடுதலாக அவர்களுக்கு டி.ஏ தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர்எம்யூ சார்பாக விடுக்கபட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக இதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பணியில் இருக்கும் ஊழியர் இறந்த பிறகு அவருக்காக நிர்ணயிக்கப்பட்ட பென்ஷன் தொகையில் 60% தொகை இறந்தவரின் மனைவி சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்படும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இதை பார்க்கிறோம். அடுத்த கட்டமாக இதில் ஊழியர்களிடமிருந்து 10 சதவீத பணத்தை பிடித்தம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி பென்ஷன் தொகையாக 9000 கூடுதலாக டி.ஏ தொகை வழங்கப்படும். இதனை 5000 ஆக மாற்றி உத்தரவு என்பது வெளியானது. இதற்கு பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் தொகையும் கூடுதலாக டி.ஏ தொகையும் வழங்கப்படும் என்கிற முறை வந்திருக்கிறது.
குறைந்தபட்சமாக ஒவ்வொருவருக்கும் முப்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசில் வேலை பார்க்கும் ஒருவருக்கு இந்த திட்டம் வேண்டாம் என்று நினைத்தால் இப்போது அமலில் இருக்கக்கூடிய 10 +4 சதவீத ஓய்வூதிய திட்டத்தை தொடரலாம். இதில் நான்கு சதவீத தொகையை முதலீடு செய்து லாபம் கிடைத்தால் அதிக ஓய்வூதியம், லாபம் கிடைக்காவிட்டால் குறைவான ஓய்வூதியமும் கிடைக்கும் என்பதையும் மத்திய அரசு தெளிவாக சொல்லியிருக்கிறது. இதையும் எஸ்ஆர்எம்யூ ஏற்றுள்ளது.
தென் மாநிலத்தில் மாற்று மொழி பேசும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். வேற்று மொழி பேசும் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். முன்னதாக இது போன்ற வேற்று மொழி பேசும் ஊழியர்கள் மூன்று வருடத்திற்குள் அவரவர் மாநிலத்திற்கு பணி மாறி செல்வார்கள் என கூறியிருந்தார்கள். அதன் பிறகு இந்த காலம் ஐந்தாகவும் 10 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது 15 ஆண்டு காலம் நிறைவடைந்திருக்கும் இந்த நிலையிலும் வேறு மொழி பேசும் ஊழியர்கள் அவரவர் மாநிலங்களுக்கு மாற்றப்படாமல் இருக்கிறார்கள். இது குறித்தும் பிரதமரிடம் பேசி அவரது கவனத்திற்கு எடுத்து சென்று இருக்கிறோம்.
குடும்பத்தைப் பிரிந்து வேறு மாநிலங்களில் பணியாற்றும் வேற்று மொழி பேசும் ஊழியர்கள் அவரவர் மாநிலத்தில் பணி செய்ய வேண்டும் என்கிற இந்த விவகாரம் தொடர்பாக ஓஎஸ்ஜி மற்றும் கேபினட் செக்ரட்ரியாக பதவியேற்கவிருக்கும் சோமநாதன் விசாரிப்பார் எனவும் பிரதமர் கூறியிருக்கிறார். அந்தந்த மாநில மக்கள் அந்தந்த மாநிலத்திலேயே பணியில் சேரும் வகையில் ரயில்வே சர்வீஸ் கமிஷன் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறோம்.
ஓய்வூதிய சட்டத்திற்கும் தொடர்ந்து வலியுறுத்தியது போலவே அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த மாநிலத்தில் பணி கிடைக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் கொடுத்துள்ளோம்.
இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சலுகைகள் 50% ஓய்வூதியம் திட்டத்தில் கிடைக்க எஸ்ஆர்எம்யூ மற்றும் அதை சார்ந்த சங்கங்கள் தொடர்ந்து முயற்சி செய்யும் என்றார்.இது பற்றி தமிழக முதலமைச்சர் கவனத்திற்கும் எடுத்துச் சென்று இருக்கிறேன். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு முதலமைச்சரும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.