என்.கே.மூர்த்தி பதில்கள்
ஷேக்தாவத்- ஆவடி
கேள்வி – வாழ்க்கையில் சிலர் மட்டுமே வெற்றிப் பெறுகிறார்கள். பலர் புலம்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?
பதில் – அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கடந்த 1979 மற்றும் 1989 ஆண்டுகளுக்கு இடையே ஒரு ஆய்வை நடத்தினார்கள். அதில் 1979 ஆண்டில் எம்பிஏ பட்டம் பெற்ற மாணவர்களிடம், “உங்கள் எதிர்காலத்திற்கான தெளிவான, எழுத்துப் பூர்வமான இலக்குகளை நிர்ணயம் செய்து அவற்றை அடைவதற்கான திட்டங்களை வகுத்து விட்டீர்களா? என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர்.
அதில் 3 சதவீதம் பட்டதாரிகளிடம் மட்டுமே எழுத்துப் பூர்வமான திட்டங்களும், இலக்குகளும் இருந்தது. 13 சதவீதம் மாணவர்களிடம் இலக்குகள் இருந்தன. ஆனால் அவர்களிடம் எழுத்து பூர்வமாக எதுவும் இல்லை. மீதி 84 சதவீதம் மாணவர்களிடம் கல்லூரியில் இருந்து வெளியேறியதும் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பது எப்படி என்ற சிந்தனையை தவிர அவர்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை.
பத்து வருடங்களுக்கு பிறகு, 1989 ம் ஆண்டில் அந்த ஆராய்ச்சியாளர்கள் அதே மாணவர்களை மீண்டும் சந்தித்து பேட்டி எடுத்தனர். வெறும் திட்டங்களை மட்டும் மனதளவில் வைத்திருந்த 13 சதவீதம் பேர் எந்த திட்டமிடலும் இல்லாத 84 சதவீதத்தினரை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதித்து கொண்டிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப் பிடித்தனர்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்ன வென்றால் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியபோது தெளிவான, எழுத்துப் பூர்வமான இலக்குகளை கொண்டிருந்த 3 சதவீதம் பட்டதாரி மாணவர்கள் மீதி 97 சதவீதம் பேரை விட பத்து மடங்கு அதிகமாக சம்பாதித்து கொண்டிருந்தனர். பட்டம் பெற்றபோது தெளிவில்லாமல், இலக்குகள் இல்லாமல் வெளியேறிய 84 சதவீதம் பேர் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த மூன்று பிரிவு மாணவர்களுக்கு இடையே இருந்த ஒரே வித்தியாசம் தாங்கள் பட்டம் பெற்றபோது அவர்கள் தங்களுக்குள் நிர்ணயித்துக் கொண்ட சிந்தனைதான் காரணம்.
வாழ்க்கையில் தெளிவான சிந்தனை, திட்டமிடல், இலக்குகள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வாழ்க்கை திசைமாறி போய்விடும்.
மணிவேல் – ஆத்தூர்
கேள்வி – கலைஞர் கருணாநிதி தொண்டர்களை “உடன்பிறப்பு” என்று அழைத்ததற்கு காரணத்தை சொல்ல முடியுமா?
பதில் – தந்தை பெரியார் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்று வந்தப் பின்னர் தனது தொண்டர்களை “தோழர்” என்று அழைத்தார். அவரைப் பின்பற்றி வந்த அறிஞர் அண்ணா தொண்டர்களை “தம்பி” என்று அழைத்தார்.
தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் தலைவராக ஏற்றுக் கொண்ட கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களை “உடன் பிறப்பு” என்று அழைத்தார்.
உடன் பிறப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் தனக்கு கீழானவரோ அல்லது தன்னைவிட மேலானவரோ உலகில் ஒருவரும் இல்லை என்பதை குறிக்கும் சொல். சமத்துவத்தை குறிக்கும் சொல்.
விஜயன் – வேலூர்
வாழ்க்கை என்றால் என்ன? சுருக்கமாக சொல்லுங்கள்.
பதில் – எதுவும் இல்லாமல் பிறந்து, எல்லாம் வேண்டும் என்று அலைந்து, ஒரு கட்டத்தில் எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்ந்து, இந்த உலகத்தை விட்டு ஒரு நாள் பறந்து செல்வதுதான் வாழ்க்கை.
இந்த வாழ்க்கையில் மனிதன் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் செய்யாமல் மரணம் அடைவது இந்த பிறப்பிற்கு அழகில்லை என்று நான் கருதுகிறேன்.
சரஸ்வதி – ஆவடி
கேள்வி – சினிமா துறையில் நேர்மையானவர்கள் குறைவு என்கிறார்களே?
பதில் – நீங்கள் எதை வைத்து அப்படி கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியைப் பற்றி ஒரு தகவல் சொல்கிறேன். ஒருமுறை சமுத்திரக்கனியை இயக்குநர் ராஜ்மௌலி
RRR படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு பார்க்க செல்கிறார். இருவரும் சந்திக்கிறார்கள். ராஜ்மௌலி சொன்னதும் பண்ணீரலாம் சார்னு சமுத்திரக்கனி சொல்கிறார். ‘எவ்ளோ சம்பளம் எதிர்பாக்கறீங்க’ன்னு ராஜ்மௌலி கேக்கறார். ‘சார்.. உங்க படத்துல நடிக்கறதே பெரிய விசயம்.. சம்பளமே வேண்டாம்.. நடிக்கறதே போதும் சார்’னு சொல்றார்.
‘இல்ல.. எதுனா வாங்கிக்கங்க’ன்னு சொல்லி, ‘2 ரூபா போடச்சொல்றேன்’னு கதைய சொல்லீட்டு போறார் ராஜமௌலி. ‘இரண்டு லட்சத்த விட பெரிய டைரக்டர் அவர் படத்துல நம்மள நடிக்கவைக்க நெனச்சதே பெருசு’ன்னு சந்தோசப்படுகிறார் சமுத்திரக்கனி.
படப்பிடிப்பு முடிஞ்சு காசோலை அனுப்பறாங்க. அதுல 2 லட்சம் பக்கத்துல இரண்டு ஜீரோ சேர்த்து போட்டிருக்கு. பதறிப்போறார் சமுத்திரக்கனி. உடனே போன் பண்ணி ‘சார்.. செக்குல ஒரு மிஸ்டேக் பண்ணீட்டாங்க.. 2 லட்சத்துக்கு பதிலா 2 கோடி போட்டுட்டாங்க சார்.. திருப்பி அனுப்பீரவா சார் ‘ ன்னு கேக்கறார்.
‘இல்ல.. இல்ல.. நான் உங்களுக்கு 2 கோடிதான் போட்டேன்..அது சரியாத்தான் இருக்கு, அதுதான் நான் fix பண்ண உங்களுக்கான சம்பளம் வச்சுக்கங்க’ன்னு சொல்றார் ராஜ்மௌலி.
சமுத்திரக்கனி இப்படி பணத்த திருப்பி கொடுக்க முன்வந்த அவர் கேரக்டரைக் கேள்விப்பட்டு பலர் பாராட்டி இருக்கிறார்கள்.
இப்படி எல்லா துறைகளிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள்.
தனசேகரன் – வசந்தம்நகர்
கேள்வி- உங்கள் அகம் தூய்மையாக இருக்கிறது.. ஆனால் புறநிலை அதற்கு சாதகமாக இருக்கிறதா?
பதில் – மிகவும் நல்ல கேள்வி! சமுதாயம் என்பது உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவுதான் சமுதாயம். நான் இல்லாமல் இந்த சமுதாயம் இல்லை. என்னிடம் இருந்துதான் என்னை சார்ந்த உறவுகளில் இருந்து தான் சமுதாயத்தின் கட்டமைப்பு தொடங்குகிறது.
இந்த சூழ்நிலையில் என்னுடைய அகத்தில், மனதில் என்ன நினைக்கிறேன், எதை குறித்து சிந்திக்கிறேனோ அதுதான் என்னை சார்ந்த புறத்தோற்றத்திலும் வெளிப்படும்.
என் உள்ளத்தில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு,எதிர்கால நம்பிக்கையில் நடைப்போடும் போது அது என்னை சார்ந்த சமூகத்திலும் வெளிப்படும். என் சமுதாயத்தில் மாற்றம் ஏதாகிலும் நிகழ வேண்டும் என்றால் அது என்னிடம் இருந்து தொடங்க வேண்டும். நான் மாறா விட்டால் என் வாழ்க்கையும் மாறாது. என்னை சார்ந்த சமுதாயத்திலும் எந்த மாற்றமும் நிகழாது.
வெள்ளத் தனைய மலர்நீட்டும் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு- (குறல் – 595)
இந்த திருக்குறளை ஒருமுறை படித்துவிட்டு வாழ்க்கையில் எப்பொழுதும் உயர்வானதை சிந்திக்கவும், உயர்வானதை பேசவும் பழகுங்கள். அது உங்களையும் மாற்றும் நீங்கள் வாழும் சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.