தமிழகத்தின் உச்சபட்ச மின்சார தேவை அடுத்த 2 ஆண்டுகளில் 23,016 மெகா வாட் என்ற அளவை எட்டும் என ஒன்றிய மின்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது

அதிகரித்து வரும் மின்தேவையை நிவர்த்தி செய்ய சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உற்பத்திக் கட்டமைப்புகளை அதிகரிக்க மத்திய மின்சார ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் மின் நுகர்வு இருந்து வருகிறது ,புதிய மின் இணைப்புகள் வழங்குதல் , நுகர்வோர் இடையே மின் பயன்பாடு அதிகரிப்பு , கோடைகாலத்தில் நிலவும் சீரற்ற வெப்பநிலை போன்ற காரணங்களால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கான மின் தேவை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோடை காலத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் பயன்பாடு மின் நுகர்வு அளவை தொடர்ந்து அதிகரிப்பதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது .
தமிழகத்தில் அதிகபட்சமாக நடப்பாண்டில் கடந்த மே 2ஆம் தேதி, மாநிலத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவுக்கு 20,830 மெகாவாட் என்ற வரலாறு காணாத அளவை எட்டியது. தமிழகத்தில் மின் தேவைக்கு போதுமான மின்சாரம் இருந்தாலும், உபகரணங்கள் பழுதடைவதால் அவ்வப்போது மின்தடையும் கணக்கிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) சமீபத்திய அறிக்கையின்படி, வரும் 2026-27 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உச்ச மின் தேவை 23,013 மெகாவாட்டை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரும் நாட்களில் மின்விநியோகத்தை உறுதி செய்வதற்காக கூடுதல் மின் உள்கட்டமைப்பை செயல்படுத்த CEA அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கையில் தமிழகத்தில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக பல்வேறு தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி தமிழகத்தில் கடந்த 2016–17ல் உச்ச நுகர்வு 14,823 மெகாவாட்டாக இருந்தது, இது 2021–22ல் 16,891 மெகாவாட்டாக அதிகரித்தது. 2026-27 ஆம் ஆண்டில், தேவை 23,013 மெகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே கடந்த பத்தாண்டுகளில் 8,190 மெகாவாட் வரை மின் தேவை அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டி காட்டியுள்ளன.
இந்த அதிகரித்து வரும் மின்தேவையை நிவர்த்தி செய்ய சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உற்பத்திக் கட்டமைப்புகளை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையில்லா மின்சார விநியோகத்தை ஆதரிக்க கூடுதல் மின் கடத்தும் பாதைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது