பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பை வழங்கினார். மேலும், இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக் கடைகளில் இன்று முதல் ஜனவரி 13 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையைச் சேர்ந்த சுமார் 50,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், , வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா கலந்து கொண்டனர்.