“தவறான பாடங்களைச் சொல்லித்தரும் ஆளுநர்” முரசொலி கண்டனம்
மசோதா குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய பேச்சைக் கண்டித்து முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாநில சட்டமியற்றும் குழுவில் ஆளுநர் முதன்மையானவர், சட்டப்பேரவை, ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எனவே சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது சட்டமியற்றும் குழுவால் நிறைவேற்றப்பட்டது என்று பொருளாகும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிலுவையில் வைப்பது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது ஆகிய மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய அரசியலமைப்பு அதிகாரம் கொடுக்கிறது. மாநில சட்டசபை மசோதா சரியில்லை எனில் நிறுத்தி வைப்பது என்பது நிராகரிப்பதாகவே அர்த்தம்” எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “தினந்தோறும் யாரையாவது கூட்டிவைத்துக் கொண்டு ஆளுநர் வகுப்பெடுப்பதில் தவறில்லை. ஆனால் மொத்தமும் தவறான பாடங்களைச் சொல்லித் தருகிறார். விழாக்களுக்கு செல்லும் ஆளுநர் விதண்டாவாதக் கருத்துக்களைச் சொல்லி கொண்டு இருக்கிறார். ஒரு சட்டத்துக்கு அனுமதி தருவது, காலதாமதம் செய்வது என்பதை நிர்வாக தாமதமாக மட்டும் கருதவேண்டாம். ஆட்சியின் கவனத்தை திசை திருப்பி மடைமாற்றம் செய்வதுதான் தாமதத்தின் நோக்கம். நன்மைகள் செய்யும் அரசின் கவனத்தை திசைத் திருப்பி, நன்மைகள் நடந்துவிடாமல் தடுக்கும் தந்திரமே இவை. மக்களால் தேர்வான ஆட்சியாளர்களுக்கு இணையாக நியமன ஆளுநர் பதவியை உயர்த்திக்காட்ட முயற்சிக்கிறார்” எனக் கூறியிள்ளது.