திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (67). அதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கடிகாசலம் என்பவரிடம் மூதாட்டி வள்ளியம்மாள் மூத்த மகன் முருகன் என்பவர் ரூ.11 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன் முருகன் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு வீடு மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் மகன் வாங்கிய பணத்தை திருப்பி மூதாட்டி வள்ளியம்மாவிடம் கடிகாசலம் கேட்டு வந்துள்ளார். ஆனால் தினமும் ஏதோ ஒரு காரணம் சொல்லி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மூதாட்டியிடம் கேட்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கடிகாசலம் கத்தியால் மூதாட்டியை தலையில் வெட்டி உள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி வள்ளியம்மாள் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்கே பேட்டை போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் வட்டிக்கு வள்ளியம்மாள் மகன் பணம் பெற்றுக்கொண்டதும் அதனை திருப்பிக் கேட்கும்போது ஏற்பட்ட இந்த வாய் தகராறில் மூதாட்டியை கத்தியால் வெட்டியதில் பலியானது தெரியவந்தது. இதனை அடுத்து கடிகாசலத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.