ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – தீவிர நடவடிக்கை
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழக காவல்துறை துவங்கியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட பல ஆண்டு காலமாக இருந்து வந்ததால் மாநிலம் முழுவதும் 100 க்கும் மேற்பட்டவர்கள் பணத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து உயிரை மாய்த்து கொண்டனர். இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். ஆளுநர் அந்த மசோதாவை மாதக்கணக்கில் கிடப்பில் போட்டதோடு மட்டுமல்லாமல் சில காரணங்களை கூறி மாநில அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை ஆளுநர் “கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டவையே” என்று பேசினார்.
ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து 10.04.2023 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளுநரை கண்டித்து 12.04.2023 அன்று மாநிலம் முழுவதும் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனால் ஆளுநர், அவசர அவசரமாக ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழக காவல்துறை துவங்கியுள்ளது.
தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம் புதிதாக பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையட்டு தடைச் சட்டத்தின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை தயார் செய்து வருகிறது.
முதற்கட்டமாக தலைநகர் சென்னை சைபர் கிரைம் காவல்துறை ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது.
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து ஒரிரு நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல்களை தயாரித்து சம்பந்தப்பட்ட, செயலி மற்றும் இணையதள நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும் ஆன்லைன் கேம் விளையாடுபவர்களை காவல்துறை கண்டறிய திட்டம் வகுத்து வருகிறது.